உள்ளூர்
4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது
நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 5 பேரும் டுபாயிலிருந்து இன்று 27 ஆம் திகதி இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள்
டுபாயிலிருந்து இன்று (27) அதிகாலை 1.10 மணிக்கு வருகை தந்த முதலாவது விமானத்தில் 3 பெண்களும் ஒரு ஆணும் வருகைதந்துள்ளதுடன் அதிகாலை 5.25 மணிக்கு வந்த விமானத்தில் பெண்ணொருவர் வருகை தந்துள்ளார்.
குறித்த ஐவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
6 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், பயணப் பொதிகளிலும் மறைத்து வைத்திருந்த போது, சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் நகைகளின் பெறுமதி 12 கோடியே 30 இலட்சம் ரூபா எனவும் கூறப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்ட 5 பேரையும் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.