உள்ளூர்

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு!

Published

on

வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த   பிற சேவைகள் முற்றாக  முடங்கியுள்ளது.

மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி   வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மனித புதைகுழி விசாரணை

குறிப்பாக முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை.

பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. அதே நேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

வவுனியாவிலும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

வவுனியாவில் உணவகங்கள் மருந்தகங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தது. பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்ததுடன் தூர சேவை பேருந்துகள் மற்றும் சில உள்ளூர் பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டிருந்தது.

வவுனியா வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், மிற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட பொது அமைப்புக்கள் பகிரங்கமாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடாத நிலையில் வர்த்தகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் தமது வர்த்தக நிலையத்தை மூடியிருந்தமையினால் ஏனைய வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version